ரெஜினா கொலை:சிறுவர்கள் இருவரிடம் வாக்குமூலம் பதிவு

ரெஜினா கொலை வழக்கு: சிறுவர்கள் இருவரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 04-09-2018 | 7:37 PM
Colombo (News 1st)  யாழ். சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை தொடர்பில் இன்று இரண்டு சிறுவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இரண்டு சிறுவர்களிடமும் நீதவானின் பிரத்தியேக அறையில் இரகசியமான முறையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் இரண்டாவது சாட்சியமான கணேஸ்வரன் சங்கீதாவின் இரண்டு பிள்ளைகளிடமே இன்று சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 10 வயதான கணேஸ்வரன் சர்மிளா மற்றும் 7 வயதான கணேஸ்வரன் கவின் ஆகியோரிடமே இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று தாம் கிணத்தடியில் இருந்ததாக இரண்டாவது சாட்சியாளர் ஏற்கனவே சாட்சியமளித்துள்ளார். இந்த நிலையில், சிறுமி ரெஜினாவின் பாதணிகள் தமது வீட்டில் இருந்ததாக இரண்டாவது சாட்சியாளரின் பிள்ளைகள் அறிவித்தமைக்கு அமைய, இன்று அவர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்கக்கூடிய அனைவரையும் அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி சிறுமி ரெஜினா கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்