முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாகக் குற்றச்சாட்டு

முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாகக் குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்

by Staff Writer 31-08-2018 | 5:19 PM
Colombo (News 1st)  விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே. இன்பராசா, முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கே. இன்பராசா அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முஸ்லிம்களிடம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உள்ளதாகக் கூறினார். இதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்தவும் குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள கே.இன்பராசா மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புவதாகவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் அரசியல் ரீதியான செயற்பாடு எனவும் இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.