கிளிநொச்சி யுவதி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி யுவதியின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 31-08-2018 | 8:26 PM
Colombo (News 1st)  கிளிநொச்சியில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கருப்பையா நித்தியகலாவிற்கு நீதி கோரி இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மட்ட அமைப்புகள் பல கலந்து கொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். கிளிநொச்சி சேவை சந்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்றனர். தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, நித்தியகலாவின் கொலையைக் கண்டித்து முல்லைத்தீவு - திருமுறிகண்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த பேரணி திருமுறிகண்டி பொதுநோக்கு மண்டபம் வரை சென்றது. மக்களின் பாதுகாப்பிற்காக திருமுறிகண்டியில் பொலிஸ் நிலையம் அமைக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.