காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் தேவை

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்: சாலிய பீரிஸ் பரிந்துரை

by Bella Dalima 31-08-2018 | 7:44 PM
Colombo (News 1st) காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை இடம்பெறும் போது அவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
ஆசியாவிலும் உலகிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ள நாடுகளில், முன்னிலையிலுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. நான்கு தசாப்த காலமாக எமது நாட்டில் காணாமற்போன, காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
என அவர் குறிப்பிட்டார். மேலும், காணாமற்போனோரின் பிள்ளைகளின் கல்வி, வீடு, தொழில், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தாம் பரிந்துரைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்தன கேந்திர நிலையத்தில் நேற்று (30) நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனைக்கூறினார். காணாமற்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 05 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.