அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை

அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு வரவழைப்பதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் பூர்த்தி

by Staff Writer 30-08-2018 | 7:20 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வரவழைப்பதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது தனது மருமகனுக்கு சொந்தமான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு முறையற்ற விதத்தில் இலாபத்தை பெற்றுக்கொடுப்பதற்கு உதவி புரியும் பொருட்டு மத்திய வங்கியின் இரகசிய தகவல்களை பகிரங்கப்படுத்தியதாக அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் வழக்கின் முதலாவது பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், சர்வதேச பொலிஸின் சிங்கப்பூர் கிளையூடாக கோரியிருந்த ஆவணங்களை அவருக்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிஸிட்ட ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர மன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த வழக்கின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேகநபர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.