அதிபராக அல்-அஸாத் நீடிப்பது விசித்திரமான பிழை

சிரியாவில் போர் முடிவுக்கு வந்த பிறகும் அதிபராக அல்-அஸாத் நீடிப்பது விசித்திரமான பிழை: மெக்ரோன்

by Bella Dalima 28-08-2018 | 4:31 PM
சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகும், அந்நாட்டு அதிபர் அல்-அஸாத் பதவியில் நீடிப்பது விசித்திரமான பிழையாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முறியடிக்கப்பட்டு, அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அவ்வாறு அமைதி ஏற்படும் போது, அங்கு அல்-அஸாத்தின் அரசு நீடிக்கும்; ஐரோப்பிய அகதிகள் நாடு திரும்புவார்கள்; நாடு புனரமைக்கப்படும். இருந்தாலும், இதில் அல்-அஸாத்தின் அரசு நீடிப்பது தான் விசித்திரமான பிழையாக இருக்கும்
என மெக்ரோன் கூறியுள்ளார். சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை இடம்பெற்ற போது, கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரான்ஸ் கடைப்பிடித்து வந்தது. இந்த நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் கணிசமான இடங்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கைப்பற்றி, இஸ்லாமியப் பேரரசாக அறிவித்தனர். மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களையும் தூண்டி விட்டனர். ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் பிரான்ஸில் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிரியாவில் அல்-அஸாத் அரசை அகற்றுவதைவிட, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு பிரான்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இத்தகைய சூழலில், தற்போது அதிபர் இம்மானுவல் மெக்ரோன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.