மாகாணசபைத் தேர்தல்: பரிந்துரைகளைப் பெறுவதற்கு குழு

மாகாணசபைத் தேர்தல் குறித்த பரிந்துரைகளைப் பெறுவதற்காக குழு நியமனம்

by Staff Writer 25-08-2018 | 6:39 AM
Colombo (News 1st) மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக, பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி பிரநிதிகளின் இணக்கத்துடன் ஐவர் கொண்ட குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்படவுள்ளது. பிரதமரைத் தவிர, குழுவில் நியமிக்கப்படும் ஏனைய உறுப்பினர்கள் அரசியலுடன் தொடர்பற்ற புத்திஜீவிகள் என சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், மாகாணசபைத் தேர்தல் எக்காரணத்திற்காகவும் பிற்போடப்படக்கூடாது என்பது கரு ஜயசூரியவின் நிலைப்பாடாகும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் எல்லைநிர்ணய ஆணைக் குழுவின் தலைவர்களுடன் மாகாணசபைத் தேர்தல் குறித்து சபாநாயகர் கலந்துரையாடியுள்ளார். சபாநாயகரினால் நியமிக்கப்படும் ஐவரடங்கிய குழு, தமது அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் சமர்ப்பிக்குமாயின், ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக தேர்தல் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.