உயர் அதிகாரிகள் முதல் வகுப்பில் பயணிக்கத் தடை

பாகிஸ்தானில் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விமானங்களில் முதல் வகுப்பில் பயணிக்கத் தடை

by Bella Dalima 25-08-2018 | 5:35 PM
பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட இம்ரான் கான் நேற்று (24) தனது இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த கூட்டத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது, ஜனாதிபதி, பிரதமர், தலைமை நீதிபதிகள், செனட் தலைவர்கள் மற்றும் ஏனைய அரசாங்க உயர் அதிகாரிகள் சர்வதேச விமானங்களில் முதல் வகுப்புக் கட்டணத்தில் பயணம் செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சர்வதேச விமானங்களில் இந்த வகை கட்டணங்கள் வணிகப் பிரிவு மற்றும் கிளப் வகுப்பு கட்டணத்தை விட 300 மடங்கு அதிகமாகும். இதேபோல், அமைச்சரவையிலும் அரசாங்கத்துறைகளில் 6 நாட்களுக்குப் பதிலாக 5 வேலை நாட்களைக் கொண்ட திட்டமும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேலை நேரங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், வேலை நேரம் 8 மணியிலிருந்து 4 மணி வரை என இல்லாமல் 9 மணியிலிருந்து 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.