அறிக்கையைத் தயாரித்தவரே எதிராக வாக்களித்தார் 

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த பைசர் முஸ்தபா

by Staff Writer 25-08-2018 | 9:48 PM
Colombo (News 1st)  பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரது வாக்குகளுடனும் தோற்கடிக்கப்பட்டது. அறிக்கை மாத்திரமல்ல பல வருடங்களாக கலந்துரையாடப்பட்ட தேர்தல் முறையின் எதிர்பார்ப்பும் தோற்கடிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் பைசர் முஸ்தபாவே, இந்த அறிக்கைக்கு எதிராக வாக்களித்தமை கவலைக்குரிய விடயம். அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய பட்டியலூடாக நியமிக்கப்பட்ட ஒருவராவார். 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் கடந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் செயல்முறையில் அவரின் செயற்பாடு வௌிப்பட்டது. 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள், அதேபோல் ஊடகங்கள் தொடர்பில் பாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டமை, அவர் ஜனாதிபதியின் சட்ட ஆலோசகராக செயற்பட்டபோது என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு உபகரணங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கொள்கலன்களை தமது அதிகாரத்தினை பயன்படுத்தி திறந்து, ஊடக கண்காட்சியை நடத்தியதனூடாக பைசர் முஸ்தபா முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரை அபகீர்த்திக்கு உட்படுத்த முயன்றார். மக்களின் இறையான்மை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உயரிய சபையில் அவரின் செயற்பாடுகள் தொடர்பில் இறுதி பகுப்பாய்வு மக்களினால் எடுக்கப்படும் என்பதை அமைச்சர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.