காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு பிணை

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு பிணை

by Staff Writer 24-08-2018 | 4:40 PM
Colombo (News 1st)  ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபர்கள் பிணையில் செல்ல முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதித்த மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்போது, பிரதிவாதிகள் மீதான குற்றப்பத்திரிகையும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கென்வில் ஹோல்டிங்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது நீதிபதிகள் குழாமான, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன் மற்றும் ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்