by Staff Writer 24-08-2018 | 7:50 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சி பேதமின்றி ஜனாதிபதி செயலணியில் பங்கேற்குமாறு யாழ். மயிலிட்டி துறைமுகத்தின் மீள்நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின்போது ஜனாதிபதி பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார்.
எனினும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பினை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்
அடைக்கலநாதன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.