கோட்டாபயவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

by Staff Writer 24-08-2018 | 6:59 PM
Colombo (News 1st)  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்காலை - வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஸ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணத்தின் போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை ஆராய்ந்து இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இலங்கை காணி சீர்திருத்த கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ப்ரஷாந்த் ஹர்ஷான் டி சில்வா, அந்த கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதிலாவதி கமலதாச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.