by Staff Writer 24-08-2018 | 6:45 PM
Colombo (News 1st) இயந்திரமயமாகிப்போன உலகில் வறுமையே பலரது இலட்சியங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆனாலும் அந்த வறுமையை வென்று சாதிக்கத் துடிக்கும் ஏராளமானோர் எம் மத்தியில் உள்ளனர்.
அவ்வாறான ஒருவர் தான் ஷெல்டன் டிலுக்ஷன்.
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் கல்வி வலையத்திற்குட்பட்ட முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகை கல்லூரியில் கல்வி கற்கும் டிலுக்ஷன் தந்தையின் பாசத்தை பாதியிலேயே இழந்தவர்.
20 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் கோட்டம் மற்றும் வலைய மட்டங்களில் முதலிடம் பெற்ற வீரராக திகழ்கின்றார்.
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ள டிலுக்ஷன், சர்வதேச அரங்கில் சிறந்ததொரு ஓட்டப்பந்தய வீரராக உயரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்.
ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை அவரது இலட்சியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை கவனிக்கின்றார் டிலுக் ஷனின் தாயாரான மாசிலாமணி.
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள டிலுக்ஷனிடம் விளையாட்டு உபகரணங்களோ பாதணிகளோ இல்லை என்பதே உண்மை.
சர்வதேசத்தை வெற்றிகொள்ளத் துடிக்கும் இவரை ஊக்குவிக்க வேண்டியது எமது சமூகத்தின் கடமையல்லவா?