விதிமுறைகளை மீறி செயற்பட்ட இலங்கை அணி வௌியேற்றம்

100 மீற்றர் ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட இலங்கை அணி வௌியேற்றம்

by Staff Writer 22-08-2018 | 8:46 PM
Colombo (News 1st)  ஆசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால், இலங்கை அணிக்கு போட்டியிலிருந்து வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது. இதனிடையே, இலங்கை Baseball அணி முதல் சுற்றுப்போட்டியொன்றில் வெற்றியீட்டியது. 18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடைபெறுகிறது. ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்ட வீராங்கனைகளை உருவாக்கும் நோக்குடன் ஆசிய விளையாட்டு விழா 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. நான்காம் நாளின் முதற்கட்டமாக ஆடவருக்கான 100 மீற்றர் ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் இலங்கை அணியை மெத்தியூ அபேசிங்க, கைல் அபேசிங்க, ஷெரந்த சில்வா மற்றும் அகலங்க பீரிஸ் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர். போட்டி விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால் இலங்கை அணிக்கு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ப்ரீஸ்டைல் அஞ்சல் நீச்சல் போட்டியில் இலங்கை அணி போட்டி விதிமுறைகளை மீறி செயற்படும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது பதிவானது. இதற்கு முன்னர் பொதுநலவாய விளையாட்டு விழாவிலும் இலங்கை ப்ரீஸ்டைல் நீச்சல் அணி இவ்வாறு போட்டி விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை ஆடவர் ஹொக்கி அணி கொரியாவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியொன்றில் 8 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. ஆடவருக்கான 63 கிலோகிராம் டய்குண்டோ போட்டியில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இலங்கையின் ஷலிந்த சம்பத் தவறவிட்டார். உஸ்பெஸ்கிஸ்தான் வீரருக்கு எதிரான முன்னோடி காலிறுதி சுற்றுப் போட்டியொன்றில் அவர் தோல்வியடைந்தார் இலங்கை Baseball அணி முதல் சுற்று போட்டியொன்றில் லாவோஸ் அணியை எதிர்கொண்டது. அபார திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி வீரர்கள் போட்டியில் 15 - 10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டினர். நாளை (23) நடைபெறவுள்ள Baseball முதல் சுற்று போட்டியொன்றில் இலங்கை அணி தாய்லாந்துடன் மோதவுள்ளது.