ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் திருகோணமலை எரிபொருள் தாங்கி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கண்காணித்தார்
by Bella Dalima 22-08-2018 | 9:09 PM
Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இன்று (22) ருகோணமலை எரிபொருள் தாங்கி, துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கண்காணித்தார்.
இன்று காலை திருகோணமலை கடற்படை முகாம் தலைமையகத்திற்கு சென்றிருந்த இட்சுனோரி ஒனோடெராவுக்கு கிழக்கு பாதுகாப்புப் படையின் செயற்பாடுகள் தொடர்பில் தௌிவூட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சீனன்குடா துறைமுகத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை அவர் கண்காணித்தார்.
பின்னர், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இக்கசுச்சி ஜப்பானிய கப்பலை பார்வையிட்ட அவர், ஹெலிகொப்டரில் ஹம்பாந்தோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார்.
2017 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டு வரும் இட்சுனோரி ஒனோடெரா, பிரதமர் ஷின்ஸோ அபேயின் Liberal Democratic கட்சியின் உறுப்பினராவார்.
2012 ஆம் ஆண்டிலும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த அவர், ஜப்பானின் அதி வலுகொண்ட பாதுகாப்பு கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கும் பாதுகாப்பு செயற்பாடுகளைப் பலப்படுத்துவதற்கும் முன்நின்று செயற்பட்ட ஒருவராவார்.