கைதிகளின் விபரங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு

விளக்கமறியலிலுள்ள கைதிகளின் விபரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by Staff Writer 21-08-2018 | 11:12 AM
Colombo (News 1st) வழக்கு விசாரணைகள் தாமதமடைவதாகத் தெரிவித்து, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளின் விபரங்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். தமது வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, விளக்கமறியலிலுள்ள பெண் கைதிகள் சிலர் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டட கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கைதி ஒருவரை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண் கைதிகள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.