கேரள பேரழிவை உலகிற்கு எடுத்துக்கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

கேரள பேரழிவை உலகிற்கு எடுத்துக்கூறிய ஏ.ஆர். ரஹ்மான்

by Bella Dalima 21-08-2018 | 5:15 PM
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றிருக்கிறார் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 368 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்து இருக்க இடமின்றி மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ள சேதத்தில் இருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபா தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன. ஆனாலும், தேவை அதிகமிருப்பதால் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் கேரள மக்கள். இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரஹ்மான், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா... முஸ்தபா...’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா... காலம் நம் தோழன் கேரளா...’ என்று பாடினார். அதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் தெரியவரும் உதவிகள் பெருகும் என்று கூறப்படுகிறது.