அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு

அட்டாளைச்சேனையில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு

by Staff Writer 21-08-2018 | 8:37 PM
Colombo (News 1st)  அம்பாறை - அட்டாளைச்சேனை, பாலமுனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டியெடுக்கப்பட்டது. பாலமுனை பகுதியைச் சேர்ந்த 59 வயதான சரிவுத்தம்பி சித்திம்மா என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்தார். ஜனாசா அன்றைய தினமே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகள் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கமைய ஜனாசா தோண்டி எடுக்கப்பட்டு, அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகளின் வீட்டில் வசித்து வந்த சரிவுத்தம்பி சித்திம்மா உயிரிழந்த தினத்தன்று தனிமையில் இருந்ததாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். அன்றைய தினம் சித்திம்மாவின் உறவினர் ஒருவர் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து ஒரு தொகை நகை மீட்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 66 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.