by Staff Writer 20-08-2018 | 4:19 PM
கல்கிஸ்ஸை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா மற்றும் போதைவில்லைகளுடன் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஐஸ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தவர்களே கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், போதை வில்லைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 - 45 வயதுக்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களில் 15 பேர் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏனைய சந்தேகநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.