ஏமாற்றப்பட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்

ஏமாற்றப்பட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்

by Staff Writer 20-08-2018 | 4:39 PM

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் சாட்சி விசாரணை இன்று (20) வவுனியா நகர கலாசார மண்டபத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா நகர கலாசார மண்டபத்திற்கு சென்றிருந்தபோதும், அலுவலக உத்தியோகத்தர்கள் எவரும் அங்கு வந்திருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் சாட்சி விசாரணை இன்று வவுனியா நகர கலாசார மண்டபத்தில் நடத்தப்படும் என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் கையொப்பத்துடன் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நகர கலாசார மண்டபத்திற்கு இன்று சென்றிருந்தனர். சுமார் 100 பேர் வரை அங்கு சென்றிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். காலை 10 மணிக்கு சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலக உத்தியோகத்தர் எவரும் வருகை தரவில்லை. இதன் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பேரணியாக சென்றனர். மாவட்ட செயலக நுழைவாயிலை பொலிஸார் மறித்தமையால் அங்கும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். மாவட்ட செயலத்திற்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இவ்வாறான அறிவித்தல்களை மீள வழங்க வேண்டாம் என தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

ஏனைய செய்திகள்