18 ஆவது ஆசிய விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பம்

18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கோலாகலமாக ஆரம்பம்

by Staff Writer 18-08-2018 | 8:06 PM
Colombo (News 1st)  18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. ஆசிய விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண வைபவம் கண்கவரும் விதத்தில் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஆசிய விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகின்றது. இம்முறை ஜெலோரா கன் கர்னோ விளையாட்டரங்கில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவம் கண்களுக்கு விருந்தளித்தது. இந்தோனேஷியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு உணர்த்தும் கலாசார நடனங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. ஆசியாவின் பலம் என்பதே இந்த முறை விளையாட்டு விழாவின் தொனிப்பொருளாகும். விளையாட்டு விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 10,000-ற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பஙகேற்பதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்த முறை 177 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற பளு தூக்கல் வீராங்கனையான ஹங்ஷனி கோமஸ் அங்குரார்ப்பண வைபவத்தில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். போட்டிகள் நாளை முதல் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.