பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்கப்படுமா?

சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் பாதிக்கப்படும் கைத்தொழில்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா?

by Bella Dalima 18-08-2018 | 10:17 PM
Colombo (News 1st) சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு பக்கசார்பான சில பிரிவினருடனான சந்திப்பின் பின்னர், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு கடந்த 15 ஆம் திகதி ஆவணமொன்றைத் தயாரித்திருந்தது. இந்த உடன்படிக்கையுடன் தொடர்புடைய கைத்தொழில்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த உடன்படிக்கையின் ஊடாக நாட்டின் தொழில்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பல சந்தர்ப்பங்களில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறியிருந்தார். குறித்த ஆவணத்தின் 11 ஆவது பக்கத்திற்கு அமைய, இந்த உடன்படிக்கையின் ஊடாக நாட்டின் தொழில்துறைக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் கைத்தொழில்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நிதி நிலை தற்போதை அரசாங்கத்திடம் காணப்படுகின்றது எனின், உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட, சாலாவ ஆயுதக்களஞ்சியம் வெடித்ததில் பாதிக்கப்பட்ட, சாமசரகந்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்? உண்மையில் இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுமா? எவ்வளவு காலத்திற்குள் வழங்கப்படும்? சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, நாட்டின் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதன் ஊடாக புலப்படவில்லையா? இந்த உடன்படிக்கையின் ஊடாக சிங்கப்பூர் பிரஜைகள் மாத்திரமின்றி, பல்வேறு இனத்தவர்களும் நாட்டிற்கு வருவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தனர். இந்த உடன்படிக்கையின் ஊடாக சிங்கப்பூர் பிரஜைகள் அல்லாதவர்களும் இலங்கைக்கு வருவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது என்பதற்கு, கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஆவணத்தின் 13 ஆவது பக்கம் சான்று பகர்கின்றது. இலங்கையின் தொழில் கட்டணம் அதிகமாகவுள்ளமையால், அது தொடர்பில் மாற்று வழியொன்றைக் கவனத்திற்கொள்ள முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், 5.8 மில்லியனுக்கும் அதிக சனத்தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், நிரந்தரமாக வசிக்காத சுமார் 2 மில்லியன் சீன, மலேசிய, இந்தியா உள்ளிட்ட பல்வேறு இனத்தவர்கள் எவ்வித இடையூறுமின்றி தொழிலுக்காக இலங்கை வருவதற்கான வாய்ப்பு கிட்டுகின்றது. இதன் ஊடாக சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பல சிக்கல்கள் காணப்படுகின்றமை தெளிவாகப் புலப்படுகின்றது. இது தொடர்பில் நாம் வினவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மாத்திரமின்றி அமைச்சின் அதிகாரிகளும் பதில் வழங்குவதில்லை. அதன் பிரகாரம் 01. உடன்படிக்கையை இரகசியமாக தயாரித்தல் 02. இவ்வாறு தயாரித்த உடன்படிக்கையில் இரகசியமாக கைச்சாத்திடல் 03. இது தொடர்பான கூட்டங்களை இரகசியமாக நடத்தல் ஆகியன கேள்விக்குரியவையாகும். இந்த உடன்படிக்கை தொடர்பில் அறிவதற்கு மக்களுக்குள்ள உரிமையை உறுதி செய்து, இதில் கைச்சாதிடுவதற்கு முன்னர் அது தொடர்பான பாராளுமன்ற விவாதமொன்றை நடத்தாமைக்கான காரணம் என்ன? மறைக்க வேண்டிய விடயங்கள் காணப்பட்டமையால், முறிகள் தொடர்பான விவாதத்தை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடாக விவாதத்தை பிற்போட்டமையை நாட்டு மக்கள் மறக்கவில்லை. சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும், அவ்வாறான பிரச்சினைகளுடன் கூடிய, மக்களிடம் இருந்து மறைக்க வேண்டியவொன்றா என மக்களுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. மக்களிடம் உண்மையை மறைத்து, உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை. சட்ட மா அதிபரின் சட்டப்பூர்வமான அனுமதி உடன்படிக்கை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்துடன், இந்த உடன்படிக்கையின் பின்னணியிலுள்ள பிரதான பங்குதாரர்கள் இருவர் தொடர்பிலும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருணையால் பிரதமராக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் ஆணை கிடைக்காத போதிலும் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆவர். மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்து, வினவும் விடயங்களுக்கு உரிய பதில் வழங்கும் அமைச்சர் ஒருவரை நியமிக்குமாறு மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம்.