நல்லாட்சி அரசின் செயற்பாட்டை புத்தகமாக வௌியிடலாம்

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டை புத்தகமாக வௌியிட முடியும்: பிரதமர் தெரிவிப்பு

by Bella Dalima 17-08-2018 | 9:52 PM
Colombo (News 1st)  நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்று வருடப் பூர்த்தியை முன்னிட்டு சியம்பலான்டுவ - கொடியாகல பிரதேசத்தில் உதாகம்மான திட்டம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. உதாகம்மான திட்டத்தின் கீழ் மக்களிடம் கையளிக்கப்படும் 107 ஆவது மாதிரிக் கிராமமான இதனை தெவிபுதுகம என பெயரிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார். 52 வீடுகளைக் கொண்ட இந்த உதாகம்மான கிராமத்திற்காக 932 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தூய்மையான குடிநீர், மின்சாரம், வீதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்தில் காணப்படுகின்றன. 800 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள், குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு சொதுரு பியச கடன் உதவி, ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலிகள் போன்றன இதன்போது வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம். 2014 ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச கொடுப்பனவு 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பொலிஸாரின் சம்பளம் ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளன. தனியார் துறையின் 1000 ரூபா குறைந்தபட்ச சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இவை அனைத்தையும் நாம் அமைதியாகவே செய்தோம். எதனை செய்தீர்கள் என எம்மிடம் கேட்கின்றார்கள். இதனை அறியாதவர்களுக்கு இவற்றை வாசிக்க வேண்டும் எனின் புத்தகமாக வழங்குவதற்கு நான் எண்ணுகின்றேன். இந்த நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக நிலைநாட்டியுள்ளோம்.