நாளை பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்

நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்று நாளை பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்

by Bella Dalima 17-08-2018 | 7:14 PM
பாகிஸ்தானின் பிரதமராக நாளை (18) பதவியேற்கவுள்ள இம்ரான் கானுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் 176 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பாகிஸ்தானில் 270 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து அண்மையில் தேர்தல் இடம்பெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி 116 இடங்களும், ஆளும் கட்சியாக இருந்த நவாஸ் ஷரீஃப்பின் பாக். முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களிலும் மற்றொரு முக்கிய கட்சியான பிலாவல் பூட்டோவின் பாக். மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாக். முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி இரண்டும் ஆரம்பத்தில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி பின்னர் தோல்வியை ஒப்புக்கொண்டன. ஆட்சியமைக்க 137 தொகுதிகள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை இம்ரான்கான் எதிர்நோக்கினார். 15 சுயேட்சைகள், 8 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள முத்தாகிதா குவாமி இயக்கம், 4 இடங்களை வைத்துள்ள பாக். முஸ்லிம் லீம் (குவாயித்), மற்றும் பலூச் அவாமி கட்சி, அவாமி முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து இம்ரான் கான் சந்தித்து பேசினார். இதற்கிடையே, கடந்த திங்கள் அன்று பாராளுமன்றம் கூடியது. இம்ரான் கான் உள்பட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதன்போது, 176 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார்.