முதற்கட்ட பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவு

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவு

by Bella Dalima 17-08-2018 | 10:09 PM
Colombo (News 1st)  கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் இன்று நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவு பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியுடன் காலாவதியாகின்றது. இந்நிலையில், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதலாளிமார் சம்மேளனத்துடனான முக்கிய பேச்சுவார்த்தை, இலங்கை முதலாளிமார் சம்மேளன காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தொழிலாளர்கள் சார்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன பங்கேற்றிருந்தன. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்வொன்றைப் பெறாத நிலையில் பிற்போடப்பட்டதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார். முதலாளிமார் சம்மேளனத்திடம் இருந்து வந்த கருத்துக்கள் திருப்தியளிக்காததால், மீண்டும் சந்திப்பதாகக் கூறி பேச்சுவார்த்தையை நிறைவு செய்ததாக வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்தார். இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான முதல் சுற்று பேச்சுவார்தையே இன்று நடைபெற்றதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காணப்படும் எனவும் முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்