கிழக்கு ஆளுநர், எதிர்க்கட்சித்தலைவர் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நியமனம் தொடர்பில் ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடல்

by Staff Writer 17-08-2018 | 10:01 PM
Colombo (News 1st)  கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது. திருகோணமலையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள 651 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கான பரிந்துரையை மத்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வறுமைக்குட்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் 30 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக 300 மில்லியன் நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் இதன்போது கூறியுள்ளார். அத்துடன், விவசாய அபிவிருத்திக்கு தேவையான வளங்கள், வீதி அபிவிருத்தி, அரச நிர்வாகத்தில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.