by Staff Writer 15-08-2018 | 7:33 AM
Colombo (News 1st) தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது.
99 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, நீண்டநேர போராட்டத்தின் பின்னர் 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்காவுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக இருந்தது.
முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
க்வின்டன் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.
ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிக்ஸ் கிலாசன், டேவிட் மிலர், ஜூனியர் டாலா ஆகியோரால் மட்டுமே 10 ஓட்டங்களைக் கடக்க முடிந்தது.
தென் ஆபிரிக்க அணி 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பந்துவீச்சில் லக்ஸான் சந்தகேன் 3 விக்கெட்களையும் அகில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இலகுவான இலக்கான 99 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் கடும் பின்னடைவுக்குள்ளானது.
முதலிரண்டு விக்கெட்களும் 6 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ் ஆகியோர் முதல் ஓவரில் ஆட்டமிழந்தனர்.
தனஞ்சய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.
தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், திசர பெரேரா ஆகியோரால் ஓர் ஓட்டத்தைகூட பெற முடியவில்லை.
தசுன் ஷானக 16 ஓட்டங்களைப் பெற்றார்.
இறுதிவரை களத்தில் நின்ற டினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களையும் இசுரு உதான 5 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்த வெற்றிக்கு அமைவாக ஒரு போட்டியைக் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசமானது.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை தனஞ்சய டி சில்வா தட்டிக்கொண்டார்.