கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் சம்பளம் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 125 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 15-08-2018 | 7:41 PM
Colombo (News 1st)  கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 125 வீதத்தால் அதிகரிப்பதற்கு மாநகர சபையின் நிதி தொடர்பிலான நிலையியற்குழு தீர்மானித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற மாநகர சபை அமர்வில், மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார். உறுப்பினர்களின் கௌரவத்திற்கு ஏற்ற வகையில், அவர்களின் கொடுப்பனவை 25,000 ரூபாவால் அதிகரிப்பது சிறந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டால் 119 உறுப்பினர்களுக்கு தற்போது செலுத்தும் 23 இலட்சம் ரூபா கொடுப்பனவு 53 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கும். இதேவேளை, 55 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்ட கண்காணிப்பிற்காக 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக கூறப்படும் விடயம் தொடர்பிலும் தற்போது விவாதிக்கப்படுகிறது. 55 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 2 இலட்சம் ரூபா வீதம் 11 மில்லியன் ரூபா செலவாகின்றது. இந்த பணத்தினால் நீரின்றி சிரமப்படும் கிராமங்களுக்கு 10 குடிநீர் திட்டங்களை வழங்க முடியும். திட்டக் கண்காணிப்பு என்று செலவு செய்யும் பணத்தை மக்களுக்காக செலவு செய்ய முடியும் அல்லவா?