பெண் கைதிகளின் எதிர்ப்பிற்கு உண்மையான காரணம் என்ன?

வெலிக்கடை சிறைச்சாலை பெண் கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன?

by Bella Dalima 14-08-2018 | 8:58 PM
Colombo (News 1st)  ​வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் கூரை மீதேறி ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. தமக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துமாறு கோரி, தம்மை தடுத்துவைத்துள்ள கட்டடத்தின் கூரை மீது ஏறி நேற்று (13) காலை 8 மணி முதல் அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த சிரேஷ்ட ஆணையாளர் திஷ்னா காரியவசம் பதுளைக்கு மாற்றப்பட்டமைக்கு எதிராக கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அதிகார சபையினர் குறிப்பிட்டனர். எனினும், பிரதான அதிகாரி மாற்றப்பட்டமைக்காக தாம் எதிர்ப்பில் ஈடுபடவில்லை எனவும் தலதா அத்துகோரல சிறைச்சாலைக்குள் வர வேண்டும் என்றும் அவரிடம் முன்வைக்க தமக்கு கோரிக்கைகள் இருப்பதாகவும் சிறைக்கைதி ஒருவர் தெரிவித்தார். பிணை வழங்காது கைதிகளை சிறையில் அவர் தடுத்துவைத்துள்ளதாகவும் ஓரிரு கிராம் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காக பெண்கள் சிலர் 2, 3 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறைக்கைதி சுட்டிக்காட்டினார். இதேவேளை, பெண் கைதிகள் ஆரம்பித்துள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் W.M.M.R. அதிகாரியிடம் வினவியபோது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். அமைச்சு விதித்துள்ள வரையறை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதை தவிர்க்கின்றனர். எவ்வாறாயினும், சிறைச்சாலைக்குள் சிறிய பிரச்சினையொன்று தோன்றியுள்ளதாகவும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றுவதாகவும் அரச நிர்வாகம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.