தி.மு.க வில் குழப்பம் ஆரம்பம்: தமிழிசை தெரிவிப்பு

தி.மு.க வில் குழப்பம் ஆரம்பம்: தமிழிசை தெரிவிப்பு

by Bella Dalima 14-08-2018 | 9:33 PM
கருணாநிதியின் இலட்சியங்களை நிறைவேற்றுவது என திராவிட முன்னேற்றக்கழகத்தின் அவசர குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கட்சிக்குள் பாரிய குழப்பம் தோற்றம் பெற்றுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கலைஞர் கருணாநிதியின் மறைவிற்குப் பின்னர் முதற்தடவையாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டம் கட்சியின் செயற்குழுத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 700 செயற்குழு உறுப்பினர்கள், 65 மாவட்ட செயலாளர்கள், 88 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. தி.மு.கழகத்தின் செயற்குழுத் தலைவர் ஸ்டாலின் கண்ணீர் மல்க இதன்போது உரையாற்றினார். மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்கித் தருமாறு முதல்வரின் கையைப் பிடித்துக் கெஞ்சியதாகவும் அவ்வாறு இடம் கிடைத்திருக்காவிட்டால், அவருக்கு பக்கத்தில் தன்னைப் புதைத்திருக்க வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். இதேவேளை, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தி.மு.க. வில் குழப்பம் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கலைஞர் மறைந்து ஒரு வாரத்திற்குள் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளமை வீழ்ச்சியைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.