Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் முன்னெடுத்த கவனயீர்ப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சுமார் 20 பேர் சிறைச் சாலையின் கூரை மீதேறி மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்று (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து ஆராய்வதற்கு இன்று (14) காலை அதிகாரியொருவரை சிறைச்சாலைக்கு அனுப்பவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு தெரியப்படுத்துமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரி தெரிவித்துள்ளார்.
கவனயீர்ப்பு நடவடிக்கையை கைவிடாவிடின் எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவிடம் வினவியபோது, அமைச்சின் அனுமதியின்றி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது என கூறினார்.
போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்களே இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு, போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு, சூட்சுமமாக எதிர்ப்புத் தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நீதியமைச்சு சுட்டிக்காட்டுகின்றது
குறித்த சிறைச்சாலை அதிகாரி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.