மின்சார சபை தொடர்பில் கோப் குழு அதிருப்தி

மின்சார சபை தொடர்பில் கோப் குழு அதிருப்தி

by Staff Writer 12-08-2018 | 8:35 PM

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்ட விதம் மற்றும் மின்சக்தி சட்டத்தை மீறும் வகையில் மின்சார சபையின் அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் அதிருப்தி வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். மின்சாரத்தை கொள்வனவு செய்யும் நடைமுறை தொடர்பில் வினவுவதற்காக மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட இலங்கை மின்சார சபையின் தலைவர் டபிள்யூ.பி. கணேகல,பொதுமுகாமையாளர் ஏ.கே. சமரசிங்க, பிறப்பாக்க மற்றும் விநியோகப்பிரிவின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கை மின்சார சபை அச்சுறுத்தும் வகையில் தமது ஒழுங்குபடுத்தல் நிறுவனமாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ள ஆவணம் தொடர்பில் கோப் குழு கவனம் செலுத்தியிருந்தது. மின்சக்தி சட்டத்திற்கமைய மின்சார சபை வருடாந்தம் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சுமார் 50 மில்லியன் ரூபா ஒழுங்குபடுத்தல் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. எனினும், ஒழுங்குபடுத்தல் கட்டணம் செலுத்த வேண்டுமாயின் பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் அந்த பதவியிலிருந்து விலக வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஏ.கே. சமரசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மின்சக்தி சட்டத்தை மீறி தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட வேண்டாம் என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி இதன்போது அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தவிர, அம்பிலிப்பிட்டி தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கானஉடன்படிக்கை காலம் நீடிக்கப்பட்டமை தொடர்பிலும் கோப் குழு அவதானம் செலுத்தியுள்ளது. இந்த தனியார் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ஏற்படுத்தி கொள்ளப்பட்ட பத்தாண்டு உடன்படிக்கை 2015 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. குறித்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக இதுவரை மக்களின் பணத்தில் 300 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இன்னும் 3 வருடங்களுக்காக இலங்கை மின்சார சபை அம்பிலிப்பிட்டி தனியார் மின் உற்பத்தி நிலையத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.