by Staff Writer 12-08-2018 | 7:30 AM
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு மேலதிக பௌசர்களினூடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருளை விநியோகிக்குமாறு, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தபால் பொதி சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், தபால் சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தபால் பொதி சேவை தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.
எனினும், ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கடிதங்களை விநியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்றும் சில ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேவையில் ஈடுபடுத்தவுள்ள ரயில்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி வணிக அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் 70 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரச ஊழியர்களின் எம் இரண்டு ஊதியத்துக்கு இணையாக உயர்த்துமாறு வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.