by Bella Dalima 11-08-2018 | 4:48 PM
இரசாயன தயாரிப்பு நிறுவனமான மான்சாண்டோவின் (Monsanto) க்ளைபோசேட் என்ற இரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு 289 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களது பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக கலிஃபோர்னியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
க்ளைபோசேட்(glyphosate) என்ற இரசாயனம் புற்றுநோயை உண்டாக்குகிறது என்று குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
க்ளைபோசேட் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை மான்சாண்டோ நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை தொடந்த டேவேயின் ஜோன்சன் என்பவர் அமெரிக்கா முழுவதும் இம்மாதிரியான முறைப்பாடுகளை முன்வைத்துள்ள 5000 பேர்களில் ஒருவர்.
2014 ஆம் ஆண்டு ஜோன்சனுக்கு வெள்ளை அணுக்களில் உருவாகும் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
கலிஃபோர்னியாவில் உள்ள பாடசாலை ஒன்றில், விளையாட்டு மைதானங்களில் புல் தரைகளை பராமரிக்கும் நபராக ஜேனன்சன் பணிபுரிந்தபோது மான்சாண்டோவின் பூச்சிக்கொல்லி தயாரிப்பை பயன்படுத்தியதாக ஜான்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை 8 வார காலமாக நடைபெற்றது.
மான்சாண்டோவிற்கு எதிரான ஆதாரங்கள் அதிகப்படியாக இருந்ததை இந்த தீர்ப்பு காட்டுகிறது என பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜோன்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
க்ளைபோசேட், உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியாகும். அதன் பாதுகாப்புத்தன்மை குறித்து பல்வேறு தரப்பு வாதங்களும் நிலவுகின்றன.