ஒரு கதிரையின் விலை 6,40,000: கொள்வனவு இடைநிறுத்தம்

ஒரு கதிரையின் விலை 6,40,000: கொள்வனவை இடைநிறுத்தினார் ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார

by Staff Writer 11-08-2018 | 8:47 PM
Colombo (News 1st) மேல் மாகாண சபைக்கான கதிரைகள் கொள்வனவை ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். தலா 6,40,000 ரூபா பெறுமதியான 125 கதிரைகள் கொள்வனவு செய்யப்படவிருந்தன. இந்த இரத்து நடவடிக்கை தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். கதிரைகள் கொள்வனவு தொடர்பில் மேல் மாகாண சபையின் நிறைவேற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அவர் கூறினார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நிறைவடையும் வரை, குறித்த கொள்வனவு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணாயக்கார தெரிவித்தார்.