ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக மிச்செல்

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவராக மிச்செல் பசெலெட் தெரிவு

by Staff Writer 11-08-2018 | 12:42 PM
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிச்செல் பசெலெட் (Michelle Bachelet) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ கட்டரெஸ் இந்தத் தெரிவினை மேற்கொண்டுள்ளார். ஐ.நா. பிரதி பொதுச்செயலாளர் அமினா மொஹமட் இத்தகவலை சில நாடுகளின் தூதுவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், அவர்களால் சில கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இருப்பினும், இந்தத் தெரிவினை ஐ.நா. பொதுச்செயலாளரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் (Farhan Haq) உறுதிப்படுத்தவில்லை. இந்தத் தெரிவு உறுதிப்படுத்தப்படுமானால் பசெலெட் ஆணையாளராவதற்கு ஐ.நா. பொதுச்சபையின் 193 நாடுகளினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இதேவேளை, இம்மாத இறுதியுடன் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஸெய்ட் ராட் அல் ஹுஸைனின் (Zeid Ra'ad al-Hussein) 4 வருட பதவி நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.