ஆருஷியின் மர்மக் கொலை திரைப்படமாகிறது

ஆருஷியின் மர்மக் கொலை திரைப்படமாகிறது

by Bella Dalima 11-08-2018 | 5:24 PM
இந்தியாவையே உலுக்கிய ஆருஷி கொலை இடம்பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அஞ்சலி, ராய் லட்சுமி இணைந்து நடிக்கின்றனர். நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி 2008 ஆம் ஆண்டு அவருடையை படுக்கையறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். ஆருஷி கொலை வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், மறுநாள் அவர்களது வீட்டு மாடியில் ஹேம்ராஜ் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்தக் கொலை வழக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. நொய்டா பொலிசார் விசாரணை நடத்தியதில் ஆருஷியின் பெற்றோரே அவரை ஆணவக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரர்கள், ராஜேஷ் தல்வாரின் நண்பர்கள் என்று மேலும் பலர் கைதானார்கள். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றினர். இந்த இரட்டைக்கொலை வழக்கின் இறுதியில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த கொலைச்சம்பவம் திரைப்படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் அஞ்சலி மற்றும் ராய் லட்சுமி இருவரும் நடிக்கின்றனர்.