by Staff Writer 09-08-2018 | 3:38 PM
Colombo (News 1st) குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (09) நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த சட்டமூலம் நேற்று முன்தினம் (07)பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது.
எனினும், சட்டமூலத்தை விவாதித்து அதனை நிறைவேற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை விட அதிக நேரம் சென்றமையால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று மாலை கூடிய அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது, இன்று இந்த சட்டமூலத்தை சபையில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டது
அதற்கமைய, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகியதையடுத்து, குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்றும் கடும் எதிர்ப்பை வௌியிட்ட நிலையில், மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.