இஸ்ரேலிய வான் தாக்குதலில் மூவர் பலி !

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் பலி!

by Chandrasekaram Chandravadani 09-08-2018 | 11:17 AM
இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா எல்லையில் நடத்திய வான் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நிலப்பரப்பின் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய பல ரொக்கெட் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸின் ரொக்கெட் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காஸாவின் ஜபாரவி பகுதியிலுள்ள 23 வயதான எனாஸ் கம்மாஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 18 மாதக் குழந்தையும் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்ணின் கணவர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், ஹமாஸ் வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. நேற்று (08) காஸாவில், இஸ்ரேலிய வாகனம் ஒன்று தாக்கப்பட்டதன் பின்னர் குறித்த வன்முறை வெடித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.