by Staff Writer 08-08-2018 | 10:18 PM
Colombo (News 1st) கால்பந்தாட்ட கோல் அடிக்கும் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த போது, தவறுதலாக கீழே வீழ்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - உதயநகர் பகுதியை சேர்ந்த 17 வயதான மோகனதாஸ் மதியமுதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்று வந்தார்.
கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ள மதியமுதன், நேற்று (07) மாலை திருவையாறு பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, கால்பந்தாட்ட கோல் அடிக்கும் பகுதியில் உள்ள கம்பியில் பயிற்சிக்காகத் தொங்கியுள்ளார்.
இதன்போது கீழே வீழ்ந்த மோகனதாஸ் மதியமுதனின் தலையில் பலத்த காயமேற்பட்டது.
இதனையடுத்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் உறவினர்களிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.
நான்கு சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் மதியமுதன் மூன்றாவது பிள்ளையாவார்.
இவரின் தந்தை கூலித்தொழிலாளி.
மதியமுதன் பாடசாலை மட்ட கிரிக்கெட் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய வீரராவார்.