by Staff Writer 08-08-2018 | 10:39 PM
Colombo (News 1st) கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் பயணிகளின் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு - கோட்டை ஓல்கட் மாவத்தை மற்றும் முதலாம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையால் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகள், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்திற்குள்ளேயும் பெருந்திரளானவர்கள் திரண்டுள்ளதாக அங்கிருக்கும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், விரைவில் சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் சற்று நேரத்திற்கு முன்னதாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்துள்ளனர்.
ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து திடீர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.