படப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை

படப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை

by Bella Dalima 07-08-2018 | 4:38 PM
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் பாண்டிமுனி படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாண்டிமுனி படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றன. இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மொடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பின்வருமாறு கூறியுள்ளார்,
இது ஒரு பயங்கரமான படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்றபோது, ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்தது. பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாகக் கும்பிடும் குட்டஞ்சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது, செருப்பு உபயோகிக்கக்கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிட்டார். நாங்கள் வெலவெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை. கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோவில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சரியமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணையவுள்ளார்.