Colombo (News 1st) அரச அச்சக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, படிவங்கள் மற்றும் வர்த்தமானி ஆகியவற்றை அச்சிடும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் மீது அரசியல் பழிவாங்கல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதற்கான நஷ்டஈட்டை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளதுடன், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச அச்சக ஊழியர்கள் நேற்று (06) முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அரச அச்சக ஊழியர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சரத் லால் தெரிவித்துள்ளார்.
அரச அச்சக ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அரச அச்சகர் கங்கானி கல்பனியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
தொழிற்சங்க நடவடிக்கையில் சில ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும், அச்சக பணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை
என குறிப்பிட்டார்.