by Staff Writer 06-08-2018 | 7:13 PM
மலையக ரயில் மார்க்கத்தில் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெலவுக்கு இடையில் பனலிய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில், றம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் எஞ்சினில் மோதி விபத்துக்குள்ளாகியதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்டவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில் சமிக்ஞை இல்லாததால் நிறுத்தப்பட்டிருந்ததாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.
இதன்போது, கொழும்பு கோட்டையில் இருந்து றம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் எஞ்சின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் மோதியுள்ளது.
விபத்தில் ரயில் பெட்டிகள் சிலவற்றுக்கும் ரயில் பாதைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.