தொடரும் மத்திய வங்கியின் ஊழல்கள்

தொடரும் மத்திய வங்கியின் ஊழல்கள்

by Staff Writer 06-08-2018 | 9:42 PM

மத்திய வங்கியின் பணிப்பாளர் ஜெஹான் அமரதுங்க என்பவர் நிறைவேற்று உப தலைவர் பதவி வகிக்கும் நிறுவனமொன்றுக்கு 10 பில்லியன் ரூபா கடன் வழங்கியமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவித்தாரன தெரிவித்துள்ளார்.

இந்த கடன் தொகை வழங்கப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களையும் அமைச்சிடம் கையளிக்குமாறு மக்கள் வங்கிக்கு கடந்த வாரம் அறிவித்ததாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இந்தக் கடனை வழங்குவதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை, இதன்போது வங்கிக்கு கிடைத்த பிணை என்ன என்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளின்போது விரிவாக ஆராயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வினவப்பட்டபோது, மக்கள் வங்கி வழங்கிய பதில் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை, வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.