by Staff Writer 06-08-2018 | 7:16 AM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று (06) ஆரம்பமாகின்றன.
இன்று ஆரம்பமாகும் பரீட்சை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3,21,469 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அத்தோடு, இம்முறை பரீட்சையில், 3 மணித்தியால வினாத்தாளுக்காக மேலதிகமாக 10 நிமிட வாசிப்பு நேரம் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள், தமது ஆள் அடையாள அட்டைகளை எடுத்துச்செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், முறைப்பாடுகள் ஏதேனும் காணப்படுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1029 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பரீட்சைகள் நடைபெறும் பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.