த.தே.கூ பொறுப்புக் கூற வேண்டுமா

த.தே.கூ. பொறுப்புக் கூற வேண்டுமா?

by Staff Writer 05-08-2018 | 9:52 PM

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடந்த சம்பவங்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி பொறுப்பு கூற வேண்டுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயத்தை ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும் என கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். 2004 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேசியத் தலைமை என்றும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் பிரகடனப்படுத்தியதால் விடுதலைப் புலிகள் அழிய நேரிட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது 2004 ஆம் அண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிடத் தயாராக இருந்தாக தெரிவித்துள்ள வீ. ஆனந்தசங்கரி, அது நடந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் காப்பற்றப்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பதவிப் பேராசையுடன் செயற்படுகின்ற இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் பதவிகளைத் துறக்க வேண்டும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இந்திய முறையிலான அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் அமைந்துள்ள உரிமைகள் சட்டக்கோவையை இலங்கை அரசியலமைப்பில் இணைக்க வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.