மலையக வீரர், வடக்கின் நட்சத்திரத்திற்கு தங்கம்

தேசிய மெய்வல்லுநர் போட்டிகள்: மலையக வீரருக்கும் வடக்கின் நட்சத்திரத்திற்கும் தங்கப்பதக்கம்

by Staff Writer 04-08-2018 | 9:38 PM
Colombo (News 1st)  96 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனையை படைத்தார். 96 ஆவது தேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. இதில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க சாதனையுடன் வெற்றியீட்டினார். போட்டியை அவர் 4 நிமிடங்கள் 17.48 செக்கன்ட்களில் கடந்து இலங்கை சாதனையை நிகழ்த்தினார். இதேவேளை, ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் மலையக வீரரான சண்முகேஸ்வரன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். ஹட்டன் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த அவர் போட்டியை 30 நிமிடங்கள், 57 .26 செக்கன்ட்களில் பூர்த்தி செய்தார். மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மற்றும் மேல் மாகாணத்தின் சச்சினி பெரேரா ஆகியோர் முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர். இவர்கள் இருவருமே 3.40 மீட்டர் உயரத்திற்கு தாவினர். இருவரும் 3.45 மீட்டர் உயரத்திற்கு தாவ முயற்சித்த போதிலும் அவர்களால் அது முடியவில்லை. கோலூன்றிப் பாய்தலில் 3.55 மீட்டர் உயர ஆற்றலுடன் தேசிய சாதனையாளராகத் திகழும் அனிதா, உபாதை காரணமாக தன்னால் போட்டியைத் தொடர முடியவில்லை என அறிவித்தார். இதேவேளை, ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 46.16 செக்கன்ட்களில் கடந்த பாடசாலை மட்ட வீரரான அருண தர்ஷன தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.