பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை
by Staff Writer 03-08-2018 | 8:21 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்போது, அதற்கு ஈடாக , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் ஒத்ததாகக் காணப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி கிடைக்கப்பெற்ற கோரிக்கை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயற்படுவதா, இல்லையேல் வேறு முறையை பின்பற்றுவதா என்பது தொடர்பில் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.