தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் இந்திய பிரஜை கைது

ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் இந்திய பிரஜை கைது

by Staff Writer 03-08-2018 | 5:22 PM
Colombo (News 1st)  ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோகிராம் எடையுடைய இரண்டு தங்க பிஸ்கட்கள் மற்றும் 535 கிராம் எடையுடைய தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் சந்தேகநபரின் பயணப்பையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.